Saturday, May 29, 2010

வருங்கால இயக்குநர்களே !











இயக்குநர் ஆக வேண்டுமா..? என்ற பதிவின் தொடர்ச்சி..


ராஜா ராணி


முழுக்க முழுக்க சினிமா போன்றே எடுக்கப்பட்ட குறும்படம் என்று சொல்லலாம். பெட்டிங்கில் ஆவல் கொண்ட இளைஞன் சதீஷ் சீட்டு, கிரிக்கெட் பெட்டிங் என்று முழு பணத்தையும் தொலைக்கிறான். காதலி ஆசையாய் கொடுத்த மோதிரத்தையும் சீட்டாடி இழக்கிறான். இருந்த பணத்தையெல்லாம் இழந்ததுடன் கடன் வேறு. அதுவும் கந்து வட்டிக்காரன் ஒருவனிடம். ஒன்றரை லட்சம் வாங்கிய கடன் வட்டி குட்டி போட்டு பேரன் பேத்தியெல்லாம் எடுத்து இரண்டு வருடங்களில் எட்டு லட்சமாகிறது. காதலியுடன் இன்னும் திருமணத்திற்கு சில நாடகளே இருக்கும் நிலையில் நாளை காலை 11 மணிக்குள் முழு பணத்தையும் கட்ட சொல்லி கந்து வட்டிகாரன் ஆள் அனுப்புகிறான்.


செய்வதறியாது மிரண்டு போகிறான் சதீஷ். காதலி கீதா தன்னிடம் ஒரு லட்சம் தேறும் என்கிறாள். நகைகளை விற்றால் இன்னும் ஒன்றரை லட்சம் சேர்க்க முடியும் என்கிறாள். ஆனால் அதெல்லாம் இந்த கடனை அடைக்க போதாது ஒரே வழிதான் இருக்கு என்கிறான். வாழ்வோ சாவோ மீண்டும் ஒரே முறை சூதாட்டம், ஜெயித்தால் மொத்த கடனையும் அடைத்து விட்டு இனிமேல் அதை நினைத்து கூட பார்க்காமல் இனிமையாய் வாழ்வை தொடங்கலாம் என்று யோசனை கூறுகிறான். வேண்டுமானால் நீயும் கூட வா .. என் அருகே அமர்ந்து கொள். என்கிறான். கதை சூடு பிடிக்கிறது. கிளப்பில் ராஜா ராணி ஆட்டமும் ஆரம்பாகிறது.


முதல் ஆட்டத்தில் கணிசமான தொகையை இழக்கிறான். இன்னும் இருப்பது சில ஆயிரங்கள் மட்டுமே. காட்சிகளுடன் இசையும் அதிர வைக்கிறது. கடைசி ஆட்டத்தில் விட்ட பணத்தை அனைத்தையும் ஜெயித்து அளவில்லா சந்தோஷத்துடன் இருவரும் காரில் கிளம்புகின்றனர்.


இதற்கிடையே நாயனுக்கு சில நாட்களாக சூதாட்ட ஆர்வத்தால் மன நிம்மதியை இழந்து மருத்துவரை ஆலோசிக்கிறான். அவரும் இது கட்டு படுத்த படவேண்டும் இல்லாவிட்டால் Pathological gambling என்ற மனநோயாக மாற வாய்புண்டு என்கிறார். சூதாட்டத்தில் பணம் இரண்டாம் பட்சம் என்றும் எதிர்பாராமல் கிடைக்கும் வெற்றி அதில் வரும் த்ரில் அதனால் ஏற்படும் மகிழ்ச்சியே போதையாக மாறி என்ன வேண்டுமானாலும் செய்ய தூண்டும் என்று கூறுவதை நினைவு படுத்தி கொண்டே காரை ஓட்டி வருகிறான்.


வரும் வழியில் வெயிலின் மிகுதியால் தர்பூசணி சாப்பிட காரை நிறுத்துகின்றனர். காதலி தனக்கு இரண்டு பீஸ் வேண்டும் என்கிறாள். இறங்கி போய் தர்பூசணியுடன் வந்து பார்த்தால் காதலி கீதாவை காரில் காணவில்லை. சற்று பயந்து போகிறான். தெருவோரம் வீலை சுழற்றி விட்டு காசு போட்டு சூதாட்டம நடக்க அங்கு பத்து ரூபாய் பெட்டிங் கட்டி கமான் கமான் என்று பதட்டத்தோடு நின்று இருப்பதை பார்த்து அதிர்ச்சியில் உறைகிறான் சதீஷ். இத்துடன் ஒரு முழூநீள சஸ்பென்ஸ் திரைப்படத்தை பார்த்ததை போன்ற உணர்வுடன் பனிரெண்டு நிமிட குறும்படம் நிறைவடைகிறது.



நடிப்பு பாபி மற்றும் நீலிமாராணி. தொழில் முறை நடிகர்கள். இருவரின் மிகையில்லாத நேர்த்தியான நடிப்பும் அருமை. ஒளிப்பதிவு மணிகண்டன் வயது 28. முறைப்படி ஒளிபதிவை பயின்றவர். இசை ராஜேஷ் முருகேசன். சும்மா தூள் பறக்கிறது என்றால் அது மிகையில்லை. ஒவ்வொரு காட்சியிலும் இந்த டீமின் உழைப்பு தெரிகிறது. இத்துடன் சவுண்ட் டிசைனிங், எடிட்டிங் என்று அனைத்திலும் நுண்ணிய தொழில் நுட்பம் தெரிகிறது. சில வாரங்களுக்கு முன் கலைஞர் டிவியின் நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் இப்படம் ஒளிபரப்பபட்டு பாராட்டு பெற்றது.





இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் 27வயது இளைஞர். ஒரு சாப்ட்வேர் வல்லுநர். மதுரையை பூர்வீகமாக கொண்ட இவர் பெங்களூருவில் சாப்ட்வேர் வேலையை உதறி தள்ளி விட்டு நண்பர்களுடன் இணைந்து இப்போது சென்னையில் "Stone Bench Creations" என்ற சினிமா கம்பெனியை துவக்கியுள்ளார். கைவசம் ஐந்து ஸ்கிரிப்ட்கள் உள்ளதாம். அதிரடி டீமூம் ரெடி. தயாரிப்பாளர் கிடைத்தால் ஜெயித்து காட்டுவோம் என்கிறார்.




பத்து பதினைந்து நிமிடங்களுக்குள் உருவாக்கபட்ட இந்தப் குறும்படங்கள் அனைத்தும் ஆழமாகவும் அழகாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் சிலர் எந்த பயிற்சியும் இல்லாமல் வெறும் கருத்தை வைத்து கொண்டு டைரக்டராக வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்.




பாரதிராஜா காலம் போல கிழக்கே போகும் ரயிலை பிடித்து சென்னை வந்து சேர்ந்து சேவல் பண்ணைகளில் தங்குவது டீ காபி சிகரெட் வாங்கி கொடுத்து உதவி இயக்குனராவது என்பதெல்லாம் அந்த காலம்.




இப்போது நாம் மூன்றாவது தலைமுறையில் இருக்கிறோம். எனவே, சினிமாவுக்கு வர ஆசைப்படுபவர்கள் அதற்கென்று இருக்கும் கல்லூரிகளில் சேருங்கள். தொழில் நுட்பங்களை தெரிந்து கொள்ளுங்கள். அதன் பிறகு கருத்தை சொல்லுங்கள். அதற்கு இத்தகைய குறும்படங்கள் உங்களுக்கு நல்லதொரு விசிட்டிங் கார்டாக அமையும். வருங்கால இயக்குநர்களே ! கிளம்பும் முன் ஒரு நிமிடம் யோசியுங்கள்.




டிஸ்கி: சூரிய கதிர் மே 16-31ல் வெளியான கட்டுரை.




15 comments:

goma said...

இது போல் பதிவுகள் இளைஞர்களுக்கு நல்ல ஒரு பூஸ்டர் டோஸ்

குசும்பன் said...

ஏட்டு சுரைக்காய் கதைதான் இயக்குநர்களுக்கு, என்னதான் படிச்சாலும் சிலரிடம் அசிஸ்டண்டாக இருந்து தொழில் கற்றால் தான் ஜொளிக்க முடியும் என்று நினைக்கிறேன் சரியா?

geethasmbsvm6 said...

ம்ம்ம் இப்படியும் நடக்கும், நடக்கும் வாய்ப்புகளே அதிகம். :((( வெகு யதார்த்தம்!

பழமைபேசி said...

சிந்தனைக்கான நல்லதொரு படைப்பு... நிறைய இளைஞர்களுக்குப் போய்ச் சேர வேண்டும்......

ராம்ஜி_யாஹூ said...

Nowadays if one have money, he can be a producer, he can be a director, he can be an actor, singer, music director.

I think cinema has reached the saturation point.

நட்புடன் ஜமால் said...

இது சாத்தியமா என்று தெரியலை ஆனால் நல்ல ஊக்கம்.

அன்புடன் நான் said...

பகிர்வுக்கும்.....
ஆலோசனைக்கும் நன்றிங்க.

அந்த குறும்பட குழுவுக்கு பாராட்டுக்கள்.

குடந்தை அன்புமணி said...

கலைஞர் தொலைக்காட்சியில் ஒரு உருப்படியான நிகழ்ச்சி நாளைய இயக்குநர் நிகழ்ச்சி என்றால் அது மிகையல்ல... தங்களின் விளக்கமான இடுகை பலருக்கும் பயனளிக்கும் என்பதில் சந்தேகமில்லை. வாழ்த்துகள்.

butterfly Surya said...

நன்றி கோமதி மேடம்.

butterfly Surya said...

நன்றி குசும்பன். சரியே.. ஆனால் இப்பொழுது இருக்கும் நிலையில் இயக்குநர்களிடம் உதவியாளராக சேருவதும் அவ்வள்வு எளிதில்லை. கொஞ்சம் டெக்னிக்கல் அறிவு இருந்தால் சுலபம் என்று தான் சொல்ல வந்தேன்.

butterfly Surya said...

நன்றி கீதா மேடம்.

butterfly Surya said...

நன்றி பழைமை பேசி..

butterfly Surya said...

அப்படியில்லை ராம்ஜீ. கே.டி குஞ்சுமோனிடம் இல்லாத பணமா..? இப்போது என்ன ஆனார்..?

butterfly Surya said...

பெரும்பாலும் சாத்தியம் தான் ஜமால்.

butterfly Surya said...

நன்றி கருணா.