Sunday, July 26, 2009

ஜமாலுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்


கணினிக்கு வெளியே நட்புடன் கை நீட்டும் நண்பர் ஜமாலை பற்றி வலை நண்பர்களுக்கு அறிமுகம் தேவையில்லை என்று நினைக்கிறேன்.




மூத்த பதிவர், பிரபல பதிவர், புதிய பதிவர், பெண் பதிவர், மொக்கை பதிவர் என்று பேதமில்லாமல் எல்லோருடைய பதிவுகளையும் படித்து ரசித்து அயராமல் பின்னூட்டமிடும் இனிய மனிதர்.



தன் வலையின் பெயரை போலவே அனைவரிடமும் நட்பு பாராட்டும் இணைய நண்பர். அதனால் இவரை “நட்புடன் ஜமால்” என்பது சாலவும் பொருந்தும்.



ஜமாலுக்கு இன்று பிறந்தநாள். இந்த இனிய நாளில் வாழ்வில் எல்லா வளமும் பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.



மனதார வாழ்த்துகிறேன்.



உங்களையும் வாழ்த்த அழைக்கிறேன்.



Saturday, July 25, 2009

கிழக்கு பாட்காஸ்ட்


ஆட்டோ ஒட்டுநர் முதல் Ford Ikon ஒனர் வரை இன்று பயணங்களின் போது FM அலைவரிசைகளை கேட்டு கொண்டே செல்வதை காண முடிகிறது. அவசர யுகத்தில் பொறுமையாக உட்கார்ந்து கேட்க முடியாவிட்டாலும் மொபைல் போனில் பாட்டு கேட்டு கொண்டே வேலையில் ஈடுபடுவதை எங்கெங்கும் பார்க்க நேரிடுகிறது. இன்று சென்னை மட்டுமல்ல இந்தியா முழுவதும் FM ரேடியோ பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.

ஆனால் பொழுது போக்கான நிகழ்ச்சிகளே எல்லா அலைவரிசைகளிலும் முதலிடம் வகிக்கிறது.
நாளை முதல் ஒரு உபயோகமான நிகழ்ச்சியும் ஆஹா FMல் ஒலிபரப்பாகவுள்ளது.
அது தான் “கிழக்கு பாட்காஸ்ட்”

நாளை 26 ஜூலை 2009, ஞாயிறு முதல் வாராவாரம் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் கிழக்கு பதிப்பகம் வழங்கும் “கிழக்கு பாட்காஸ்ட்” என்ற நிகழ்ச்சி ஆஹா FM பண்பலை வானொலியில் மதியம் 12.00 மணியிலிருந்து 1.00 மணி வரை ஒலிபரப்பாக இருக்கிறது. இதற்காக முதலில் திரு. பத்ரிக்கும் கிழக்கு டீமுக்கும் வாழ்த்துகள்.


இணையத்தில் பாட்காஸ்ட் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். பல்வேறு தலைப்புகளில், பல்வேறு சுவாரசியமான விஷயங்கள் பற்றிய கலந்துரையாடலும் கேள்வி பதில்களும் தான்.


இது ரேடியோவுக்கு மிகவும் பொருத்தமான ஒரு விஷயம். அமெரிக்காவில் Talk Radio நிகழ்ச்சிகள் பல உள்ளன. ஆனால் இந்தியாவில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் ஏனோ தனியார் வானொலிகளில் கேட்கக் கிடைப்பதில்லை.



ஆஹா FM 91.9 மெகாஹெர்ட்ஸில் சென்னையில் ஒலிக்க கேட்கிறது. சென்னையைச் சுற்றி சில கிலோமீட்டர் தூரத்திலும் கேட்கலாம். நாளை ஒலிப்பரப்பாகவுள்ள நிகழ்ச்சி “பங்கு சந்தை” பற்றியது.


இதில் திரு.பத்ரி அவர்களும் “அள்ள அள்ள பணம்” நூலாசிரியர் திரு. சோம வள்ளியப்பனும் பங்கு சந்தை முதலீடுகள் குறித்து உரையாடுகின்றனர். ஆன் லைன் வர்த்தகத்தின் பயன்கள் குறித்தும் நீண்ட நாள் பங்குகளை வைத்திருப்பது குறித்தும் நானும் சிறிது உரையாடினேன்.


இல்லதரசிகளும் வீட்டிலிருந்த படியே ஆன்லைனில் வர்த்தகம் செய்வதின் அனுபவங்கள் குறித்து திருமதி. V.Rajeswari அவர்களும் இரண்டு நிமிடம் Telephonic Interview கொடுத்துள்ளார்கள்.


பங்கு சந்தையில் ஆர்வமுள்ளவர்கள், முதலீடு செய்ய நினைத்து பயத்துடன் விலகி நிற்பவர்கள் அனைவரும் கேட்கலாம்.


சில மொக்கை பதிவுகள் போன்று பல மொக்கை நிகழ்ச்சிகள் FM அலைவரிசைகளில் தொடர்ந்து ஒலித்து கொண்டிருந்தாலும் இது போன்று இன்னும் சில உபயோகமான நிகழ்ச்சிகளும் நிறைய வர வேண்டும் என்பதே என் விருப்பம்.


உங்கள் விருப்பம் என்ன என்பதை பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.

அதன் ஒலி வடிவம் இங்கே

டிஸ்கி: V.Rajeswari எங்க வீட்டு எஜமானியம்மா

Thursday, July 23, 2009

உடற்பசியும்... அறிவு பசியும்...




அவசியமான அர்த்தங்கள் சூரியனைச் சுற்றிவரும் கோள்களில் பூமி மட்டும்தான் இயற்கையால் ஆசிர்வதிக்கப்பட்டு இருக்கிறது. மற்ற கோள்கள் எல்லாம் உயிர்ப்பு சக்தி அற்று மருகி நிற்க, பூமி மட்டும் உயிரினங்களைப் பிரசவித்து தாய்மைக்குரிய பூரிப்போடு தழைத்துச் செழித்திருக்கிறது. அந்த உயிரினங்களில் தனித்துவமுடையதாக, மற்ற எல்லா உயிரினங்களுக்கும் தலைமை தாங்கக்கூடிய ஆற்றலும் அறிவும் பெற்றதாக இருப்பதுதான் மனித இனத்தின் சிறப்பு.


இந்த ஆற்றலையும் அறிவையும் மனிதனுக்கு அவன் நினைத்த மாத்திரத்திலேயே இயற்கை வழங்கிவிடவில்லை. DNA என்ற புரதச் சுருளில் தோன்றிய உயிரின் தொடக்கம், மனிதன் என்ற உன்னத நிலை வரை பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கிறது. அப்படிப்பட்ட உயிரைத் தாங்கி இருக்கும் உயிரினங்களின் தலையான பணியே இனப்பெருக்கம்தான்.


இனப்பெருக்கத்தை ஊக்குவிப்பதையே குறியாகக் கொண்டு செயல்படுபவை ஜீன்கள். ஜீன்கள், தன் உயிர் தேவைக்கு ஏற்றவாறு உயிரினங்களில் ஏற்படுத்திய பரிணாம மாற்றங்கள் பல. படர்வன, பறப்பன, ஊர்வன, பாலூட்டிகள்... போன்றவை இவற்றில் அடங்கும். பாலூட்டிகளின் முதிர்ந்த பரிணாமம்தான் மனித இனம். இந்தப் பரிணாமங்களுக்கும், உயிரினங்களின் வாழ்வியல் மாற்றங்களுக்கும் அடிப்படையாக ஜீன்கள் கையில் எடுத்திருக்கும் யுக்திதான் காமம்.


'காமமா!' என அதிர்ச்சியடைந்தாலும், 'ஆமாம்!' என ஒத்துக்கொள்ள வேண்டிய பல அறிவியல் உண்மைகள் இருக்கின்றன. காமம் என்ற ஒன்று இல்லாவிட்டால் இனப்பெருக்கம் இருந்திருக்காது. உயிர்களும் தழைத்திருக்காது. ஆக, வாழ்வியல் தேவைக்கான முக்கிய அம்சமாகக் காமம் இருக்கிறது.


ஆனால், காம உணர்வில் வக்கிரம் நுழைகிறபோதுதான் அது உயிருக்கு எமனாக முடிகிறது. அதற்கும் உளநலவியல் ரீதியான அறிவியல் காரணங்கள் பல இருக்கின்றன. பன்னிரெண்டு வகையான மனித காமத்தையும், அதனால் மனித இனத்தில் ஏற்பட்ட வாழ்வியல் ஏற்ற இறக்கங்களையும் 'அர்த்தமுள்ள அந்தரங்கம்' என்ற இந்தப் புத்தகத்தில் விரிவாக விளக்கி இருக்கிறார் டாக்டர். ஷாலினி.


இந்தப் புத்தகத்தில் மனித இனத்தின் அந்தரங்கம் குறித்த ஆச்சரியமூட்டும் உண்மைகளும், அறிந்துகொள்ள வேண்டிய அடிப்படைத் தகவல்களும் நிரம்ப உள்ளன. காமத்தின் ஆதாரக் குணங்களோடு மனித இனத்தின் அந்தரங்கப் பிரச்னைகளை, உளநலவியல் பூர்வமாக அணுகி இருக்கிறார் நூலாசிரியர்.




இந்தப் புத்தகத்தைப் படியுங்கள் உங்கள் புரிதல்கள் மேலும் விரிவடையும்.


வெளீயீடு: விகடன் பிரசுரம்
பக்கம்: 192
விலை: Rs: 80/-
ஆன்லைனில் வாங்க இங்கே


டாக்டர் ஷாலினி





இவரை பற்றி நமது வலைபதிவர்களுக்கு ஒரளவு அறிமுகம் உண்டு. குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் தொந்திரவுகள் பற்றி சில மாதங்களுக்கு முன் வலை பதிவர்கள் ஏற்பாடு செய்த Good Touch Bad Touch என்ற கருத்துரையாடலில் கலந்து கொண்டு பல ஆலோசனைகளை வழங்கியவர்.


சென்னை மருத்துவ கல்லூரியில் இளங்கலை மருத்துவத்தை பயின்ற டாக்டர் ஷாலினி முதுகலையில் மன நல மருத்துவத்தை மதுரை மருத்துவ கல்லூரியில் முடித்தவர். தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலை கழகத்தில் “மகளிர் மனநலம்” குறித்த ஆராய்ச்சியில் முனைவர் பட்டம் பெற்றவர்.


தற்போது சென்னை மருத்துவ கல்லூரியின் மன நல பிரிவில் ஆராய்ச்சியாளராக பணி புரிந்து வருகிறார். மேலும் ‘உளநல சேவை மற்றும் ஆராய்ச்சி மையம்’ என்ற அமைப்பை நிறுவி அதன் இயக்குநராகவும் இருந்து வருகிறார். மனம் நலம் குறித்த பல தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் நீங்கள் டாக்டரை பார்த்திருக்கலாம்.


தமிழில் இதுவரை எழுதிய நூல்கள் டீன் ஏஜ் பிரச்ச்னைகள், ஆளை அசத்தும் 60 கலைகள், அந்தரங்கம் இனிமையானது, ஆண் பெண், பெண்கள் மனசு, பெண்ணின் மறுபக்கம்.


தமிழில் இவரது வலைப்பூ இங்கே

Tuesday, July 21, 2009

பாப்கார்ன் ஜீலை 16 - 30


மொபைல் பேசி கொண்டே காரும் இரண்டு சக்கர வாகனங்களும் ஒட்டும் போக்கு நாளுக்கு நாள் சென்னையில் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் அதிகரித்து கொண்டே வருகிறது. என்னதான் காவல்துறை தெருவோரங்களில் மறைந்திருந்து பிடித்தாலும் அவர்களுக்கும் டிமிக்கி கொடுத்து விட்டு என்னவோ கோட்டையை பிடிக்க பிளான் போடுவது போல சில அறிவு ஜீவிகள் பேசி கொண்டே போவதும் அரட்டை அடிப்பதும் கூட நடக்கிறது.
நடப்பாண்டில் தமிழகத்தில் மட்டும் சாலை விபத்தில் இறந்தோரின் எண்ணிக்கை 13 ஆயிரத்தை தொட்டுவிடும் என்பது அதிர்ச்சியான தகவல். குடித்து விட்டு வாகனம் ஓட்டுவதாலும் நெடுஞ்சாலைகளில் விபத்து அதிகரிக்கிறது.

ஆண்டு {உயிரிழப்புகள்}

2004 {9,507}
2005 {9,760}
2006 {11,009}
2007 {12,036}
2008 {12,784}

சாலை விதிகளை மீறுவது, சட்டத்தை மதிக்காதது போன்றவற்றை கண்டு கொள்ளாமல் வாகன சோதனை சாவடிகளில் “வசூல் வேட்டை”யில் குறியாய் இருக்கும் அதிகாரிகளின் அலட்சிய போக்கு மாற வேண்டும். மக்களும் திருந்த வேண்டும். திருந்தமாட்டேன் என்று அடம் பிடிப்பவர்கள் இந்த படத்தை பார்க்க வேண்டும்.


*********************************************************

தன்னம்பிக்கை ஓவியங்கள்








மேலே உள்ள இந்த அழகான பென்சில் ஓவியங்களில் அப்படி என்ன சிறப்பு..?
இங்கே பாருங்கள் தெரியும்.


****************************************************************


Mr.X கப்பலில் வேலை கேட்டு விண்ணப்பித்து இருந்தார்.

அவர் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டார்.

அவரிடம் நேர்முகத் தேர்வு நடத்தியவர் கேட்டார்


“புயல் வருமானால் என்ன செய்வீர் ?என்று .

அவர் சொன்னார் “நங்கூரத்தை நாட்டுவேன் “என்று

“முன்னைவிட பெரியதாய் இன்னொரு புயல் வருகிறது அப்போது நீர் என்ன செய்வீர் ?”

“நான் இன்னொரு நங்கூரத்தை நாட்டுவேன் “என்றார் அவர் .இப்படி அது சென்று கொண்டு இருந்தது .

“…பத்தாவது புயல் !”

Mr.X சொன்னார் “நான் இன்னொரு நங்கூரத்தை நாட்டுவேன் “

அந்த மனிதர் கேட்டார் .”ஆனால் இத்தனை நங்கூரத்தை நீர் எங்கிருந்து பெறுவீர் ?”என்று

அதற்கு Mr.X சொன்னார் .”தாங்கள் எங்கிருந்து புயல்களை பெறுவீர்களோ அங்கிருந்துதான் “


*******************************************************

காமமா..?? ஆமாம்...




தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்

அம்மா அரிவை முயக்கு. (1107)


தானே உழைத்துச் சேர்த்ததைப் பலருக்கும் பகுத்து வழங்கி உண்டு களிப்பதில் ஏற்படும் இன்பம், தனது அழகிய காதல் மனைவியைத் தழுவுகின்ற இன்பத்துக்கு ஒப்பானது.


Translation:
As when one eats from household store, with kindly grace
Sharing his meal: such is this golden maid's embrace.


Explanation:
The embraces of a gold-complexioned beautiful female are as pleasant as to dwell in one's own house and live by one's own (earnings) after distributing (a portion of it in charity).

Monday, July 20, 2009

அன்பால் இணைவோம்...


பாருக்குள்ளே நல்ல நாடு நம் பாரதநாடு என்றார் பாரதியார்.


ஆம்... விஞ்ஞான வளர்ச்சியிலும் தொழில் வளர்ச்சியிலும் அதிவேக முன்னேற்றம் கண்ட மேலை நாடுகள் கூட நம் பாரத நாட்டை கண்டு பொறாமைப்படக் காரணம் இந்தியாவின் தொழில் வளர்ச்சியோ, விஞ்ஞான வளர்ச்சியோ அல்ல.. நம் நாட்டின் பண்பாடும், கலாச்சாரமும்தான்..


கூட்டுக்குடும்ப அமைப்பு, கணவன் மனைவி என்ற கண்ணியமான பந்தம், கட்டுக்கோப்பான வாழ்க்கை முறைதான் அவர்களை ஈர்த்தது. அவர்களின் எந்திரமயமான வாழ்க்கை, நிலையற்ற குடும்ப அமைப்பு, கட்டுப்பாடு இல்லாத வாழ்க்கை முறை ... இப்படி வாழ்ந்துவந்த அவர்கள் நம் இந்திய கலாச்சாரத்தால் ஈர்க்கப்பட்டு தங்கள் வாழ்க்கை முறையை இந்திய கலாச்சாரத்தைப் போல் மாற்றிக் கொண்டிருக்கின்றனர்.


நம் நாட்டில் பலவகையான மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மொழி, இனம் வாழ்க்கை முறை போன்றவற்றால் மாறுபட்டாலும், இந்திய கலாச்சாரத்தை பின்பற்றியே வாழ்ந்து வருகின்றனர்.ஆனால் இன்று காலம் மாற மாற இக்கரைக்கு அக்கரை பச்சை என்பது போல்.. கொஞ்சம் கொஞ்சமாக மேற்கத்திய நாகரீகத்தைக் கடைப் பிடிக்கும் நிலைக்குச் சென்றுவிட்டனர்.


கூட்டுக் குடும்பங்கள் சிதைந்து கொண்டு இருக்கின்றன. பொருளாதாரத் தேவை நெருக்கடி, அவர்களின் வாழ்வை சீரழித்துக்கொண்டு இருக்கின்றது. கணவன், மனைவி, குழந்தை, குடும்பம் என்று வாழ்ந்த அவர்களின் இனிமையான வாழ்வு இன்று நீதிமன்றங்களின் வாசலில் காவல் காத்து நிற்கின்றது. இந்தியாவில் தற்போது விவாகரத்து அதிகரித்துள்ளது. குடும்ப நீதி மன்றங்களில் பல ஆயிரம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. தமிழகத்திலும் இந்த அவலநிலை அதிகரித்துள்ளது.


சென்னை போன்ற பெருநகரங்களில் தினமும் 15 விவாகரத்து வழக்குகள் பதிவாகின்றன.இப்படி விவாகரத்துக் கோரி நிற்பவர்கள் ஒன்றும் புரியாத படிப்பறிவற்ற பாமரர்கள் அல்ல... நன்கு படித்து, மேலான பதவிகளில் இருப்பவர்கள்தான்...ஒருபக்கம் கையில் சிறிய குழந்தையுடன் பெண், எதிரேஅந்த பெண்ணின் கணவனும் அவனது பெற்றோரும் விவாகரத்து கோரி..திருமணமாகி இரண்டு மாதமே ஆன தம்பதிகள் இன்னொரு பக்கம்.. அதுமட்டுமின்றி,திருமணமாகி பல ஆண்டுகள் தம்பதிகளாக வாழ்ந்த 40, 45 வயது மதிக்கத்தக்க தம்பதிகள்...ஒருவரை ஒருவர் காதலித்து புரிந்து கொண்டு திருமணம் செய்துகொண்டவாகள் கூட இப்படி விவாகரத்து கோரி நீதி மன்றங்களின் வாசலில் நிற்கின்றனர்...

பத்திரிக்கை அடித்து மண்டபம் பிடித்து பெரும்பொருட்கள் செலவில் சொந்த பந்தங்கள் முன்னிலையில் அம்மி மிதித்து அருந்ததி பார்த்து நடைபெற்ற திருமணங்கள் கூட இன்று விவாகரத்து கேட்டு நிற்கின்றன..



இப்படி பாரபட்சமின்றி அனைத்து வகையினரும் தங்கள் வாழ்க்கையில் இப்படிப் பட்ட முடிவு எடுக்க காரணம் என்ன..?திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப் படுகின்றன என்று சொல்வார்கள். அந்த சொர்க்கமான வாழ்வு இவர்களுக்கு நரகமானது ஏன்..?இந்த நிலை பெருநகரங்களில் மட்டுமின்றி கிராமங்களிலும் பரவி வருகின்றது.



ஆண் பெண் இருவரும் கல்வியிலும், பொருளாதாரத்திலும் விரைவாக முன்னேறிக் கொண்டு வருவது பெருமைக்குரிய விஷயம்.அவர்கள் அதீத வளர்ச்சியின் இடையே அவர்கள் வாழ்வில் ஏற்படும் சின்னச் சின்ன பிரச்சனைகளால் அவர்களது வாழ்க்கை பெரும் வகையில் பாதிக்கப்படுவதுதான் மிகவும் வேதனைக்குரிய விஷயம்.மண முறிவிற்கான அடிப்படைக் காரணம் ·

ஒவ்வொருவரும் எதிர்பார்ப்புடனும், ஏராளமான கனவுகளுடனும் தங்கள் திருமண வாழ்வை ஆரம்பிக்கின்றனர். இந்த எதிர் பார்ப்புகள், கனவுகள் சின்னச்சின்ன பிரச்சனைகளால் சிதைந்து போகும்போது ஒருவருக் கொருவர் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. இதனால் விவாகரத்து என்ற அவசர முடிவை எடுக்கின்றனர்.· சிலர் ஆடம்பர வாழ்விற்கு ஆசைப்பட்டு அது கிடைக்காத போது தங்கள் எண்ணப்படி விருப்பப்படி வாழ்க்கையை அமைத்துக்கொள்ள இந்த முடிவை எடுக்கின்றனர்.·





ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளும் தன்மை இல்லாததாலும், சந்தேக எண்ணங்களாலும் பல குடும்பங்கள் பிரிகின்றன. · கணவன் மனைவியிடையே தாம்பத்திய உறவு சிக்கலால் விவாகரத்து கோருகின்றனர்.இன்றைய அவசர உலகில் காலை முதல் இரவு வரை வேலை செய்வதால் கணவன் மனைவி தங்களின் எண்ணங்களையும் உணர்வுகளையும் பகிர்ந்துகொள்ள நேரமில்லாமல் போகிறது.


உணர்வுகளை மட்டுமல்லாமல் அவர்களிடையே ஏற்படும் சிறு சிறு பிரச்சனைகளைக்கூட ஒருவருக்கொருவர் பேசி தீர்த்துக்கொள்ள முடியாமல் போகிறது. இதனால் சிறு பிரச்சனைகள் கூட பூதாகரமாகின்றன. மேலும் பொருளாதாரத்தில் இருவரும் சமமாக இருப்பதால் உன்னை நம்பி நான் இல்லை என்று மனதளவில் ஈகோ தன்மை வந்து தங்கள் பிரச்சனையை பெரியவர்களிடம் கூட கூறாமல் தங்களுக்குள்ளேயே பிரிவு என்று ஒரு முடிவை எடுக்கின்றனர்.


முன்பெல்லாம் கணவன் மனைவியிடையே பிரச்சனை வந்தால் குடும்பத்தில் உள்ளவர்கள் பேசி சமாதானம் செய்வார்கள். மீறிப்போனால் ஊர் பெரியவர்கள் சேர்ந்து அறிவுரை கூறி சமாதானம் செய்து சேர்த்து வைப்பார்கள். மணமுறிவு ஏற்பட்டால் அது குடும்பத்திற்கு இழுக்கு என்று நினைப்பார்கள். ஆனால் இன்று நிலைமையோ வேறு. இதற்கு கூட்டுக்குடும்ப சிதைவும் ஒரு காரணமாகிறது.கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ பழகிக்கொள்ள வேண்டும்.


ஒருவர் மற்றவர் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். இருவருக்கும் ஏற்படும் சின்ன சின்ன பிரச்சனைகளை மனம்விட்டு பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும்.கணவன் மனைவி இருவரிடையே மூன்றாவது நபர் தலையிடுவதைத் தவிர்ப்பது நல்லது.


குடும்பத்தின் அந்தரங்க விசயங்களை மற்றவருடன் பகிர்ந்து கொள்ளக் கூடாது.கணவன் மனைவி குடும்பத்தாரைப் பற்றியும், மனைவி கணவன் குடும்பத்தாரைப் பற்றியும் கிண்டலோ, தரக்குறைவாகவோ பேசுவதைத் தவிர்க்க வேண்டும்.பொருளாதாரத்தை மட்டும் கருத்தில் கொள்ளாமல் அன்பாக, அனுசரணையாக ஒருவருக் கொருவர் நடந்துகொள்ள வேண்டும். நகைச்சுவை உணர்வுகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்.


கணவன் மனைவி ஒருநாளைக்கு நான்கு முறையாவது அன்பாக கட்டித் தழுவிக்கொள்ள வேண்டும் என்று உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். இவ்வாறு தழுவும்போது உடலும், மனமும் புத்துணர்வு பெறுவதுடன் குதூகலத்துடன் வாழ்வதாக கண்டறிந்துள்ளனர்.கணவன் மனைவி உறவு என்பது உடலுறவு மட்டும் கிடையாது. அதற்கும் மேலாக பல விஷயங்கள் உள்ளன. உடல் ரீதியான பிரச்சனை ஏற்பட்டால் இருவரும் கலந்து பேசி அதற்கான மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்ளலாம்.


கணவன் மனைவியிடையே அன்பு ஒன்று மட்டுமே இருந்தால் அந்த வாழ்க்கையில் ஒரு ஈர்ப்பு இருக்காது. சின்னச் சின்ன ஊடலும் கூடலும் தான் வாழ்வில் ரசனை சேர்க்கும். கணவன் மனைவி இருவரிடையே கோபம் வரலாம் ஆனால் அந்த கோபம் வெறுப்பாக மாறிவிடக்கூடாது. வெறுப்பு பிரிவை உண்டாக்கிவிடும்.


அவசர கதியில் தவறான முடிவைத் தேடும் தம்பதியரே..சற்று உங்களைச் சார்ந்தவரைகளையும் நினைத்துப் பாருங்கள்ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மண முறிவு ஏற்பட்டால் அது அந்த குடும்பத்தை வெகுவாக பாதிக்கும். அந்த குடும்பத்தில் பிறந்த மற்ற பிள்ளைகளின் வாழ்க்கைக்கு உங்கள் நடவடிக்கை ஒரு தடைக்கல்லாகக் கூட அமையலாம்..

வாழ்ந்தாலும் ஏசும்
தாழ்ந்தாலும் ஏசும்வையகம் இதுதானடா...

என்ற சினிமா பாடல் ஒன்றைக் கேட்டிருப்பீர்கள்.ஒருவர் நன்றாக வாழ்ந்தால் அவரைப் பற்றி அப்படி பொருள் சேர்த்தார் இப்படி பொருள் சேர்த்தார் என்று அவதூறாகப் பேசுவர்...சிறப்பாக வாழ்ந்தாலே இப்படியென்றால்..ஒருவர் வாழ்க்கை சீழிந்தால் அவரின் நிலை என்ன என்பதை யோசித்துப் பாருங்கள்..உங்கள் குழந்தைகளை நினைத்துப் பாருங்கள்...

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்றார் ஒவையார். ஒரு குழந்தை நன்கு வளர வேண்டுமானால் அந்த குடும்பத்தில் அன்பான, அமைதியான சூழ்நிலையும், அணுசரணையான பேச்சும், அறிவார்ந்த வழிகாட்டலும் மிகவும் தேவை. அதைத் தரவேண்டிய பெற்றோர்களே ஆளுக்கொரு திசையில் இருந்தால் எதையுமே பெற முடியாத அந்த குழந்தையின் தளிர் மனது எவ்வளவு வேதனை அடையும்...




அந்த குழந்தையின் எதிர்கால வாழ்க்கை என்னவாகும்....அன்புக்கு ஏங்கும் அந்த குழந்தைகள் தவறான பாதையில் செல்லக்கூட வாய்ப்புகள் அதிகம். உங்கள் குழந்தைகளின் வாழ்க்கையை நீங்களே அழிக்கலாமா?


ஒருமுறைதான் பிறக்கின்றோம். எங்கோ பிறந்து நம்முடன் வாழ்வில் சேரும் துணையை அன்பாக அரவணைத்து இந்த வாழ்க்கைக் கடலைக் கடக்கலாம் அல்லவா?



வேண்டாமே... விவாகரத்து...



டிஸ்கி 1 : நன்றி நக்கீரன்.

டிஸ்கி 2 : சாப்ட்வேர் என்று சொன்னதும் நினைவுக்கு வரும் கம்பெனியில் வேலை பார்க்கும் அந்த பெண்ணுக்கும் ( Age: 23 )மிகப்பெரிய பல நாட்டு நிறுவனத்தில் வேலை பார்க்கும் அந்த பையனுக்கும் { Age: 27 } சென்ற வருடம் மிக விமர்சையாக திருமணம் நடந்தது. நேற்று அந்த பெண் சென்னை குடும்ப நல நீதி மன்றத்தில் விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்துள்ளதாக செய்தி கேட்டு துடித்து போனேன்.

Wednesday, July 15, 2009

பதிவர்களை வாழ்த்துங்கள்

சென்னையில் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் குறும்பட விழாவில் இந்த மாதம் கேபிள் சங்கரின் குறும்படமான Accident திரையிடப்படுவதாக அறிந்ததும் நானும் அண்ணன் மணிஜியும் ஆர்வமாக சென்றோம். இது இவர்கள் நடத்தும் பத்தாவது குறும்பட விழா.



இலக்கிய பகுதியில் சிறப்பு விருந்தினராக எழுத்தாளர் பிரபஞ்சன் கலந்து கொண்டார். அருமையான பல கருத்துகளையும் உலக சினிமாக்களை பற்றியும் தனக்கே உரிய பாணியில் மிகவும் ரசிக்கதக்க வகையில் கூறினார். உலக சினிமா ஆர்வலனான எனக்கு மிகவும் பயனுள்ளதாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. இந்த மாத சிறந்த பதிவருக்கான விருது
தோழி தமிழ்நதி அவர்களுக்கு வழங்கப்பட்டது. அவருக்கும் என் இனிய வாழ்த்துகள்.


பிறகு "நிலமெல்லாம் இரத்தம்" "குண்டன்" " ஆக்சிடன்ட்" ஆகிய மூன்று குறும்படங்கள் திரையிடப்பட்டது.

நிலமெல்லாம் இரத்தம்: ஈழத்தமிழர்களின் வாழ்க்கையை பிரதிபலித்து நெஞ்சை உருக்கிய ஒரு குறும்படம்.

குண்டன்: தன் காதலிக்கும் பெண்ணிற்காக இளைஞன் ஒருவன் உடல் இளைக்க படும் அவஸ்தைகளை கொண்ட நகைச்சுவை குறும்படம்.

ஆக்சிடன்ட்: இரு சக்கர வாகன ஒட்டிகள் தலைகவசம் அணிய வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்தும் குறும்படம். சஸ்பென்ஸ் திரில்லர் போல அருமையாக இருந்தது.


மூன்று குறும்பட இயக்குநர்களுக்கும் விருதுகள் வழங்கபட்டன. விருதை வழங்கியவர் அணமையில் விகடன் டாக்கீஸால் வெளியான ”வால்மீகி” திரைப்பட இயக்குநர் திரு. அனந்த நாராயணன். அனைவருக்கும் வாழ்த்துகள்.





அருமை நண்பர் கேபிள் சங்கரை அனைத்து பதிவர்கள் சார்பிலும் வாழ்த்துகிறேன். முன்பே சொன்னது போல இது எனக்கே கிடைத்த விருதாக எண்ணி மகிழ்கிறேன்.


இந்த விழாவை பல சிரமங்களுகிடையில் சிறந்த முறையில் நடத்தும் நண்பர்கள் அருணுக்கும் குணாவிற்கும் எனது வாழ்த்துகள் என்றும் உண்டு.





அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின்.




A pleasant word with beaming smile's preferred,

Even to gifts with liberal heart conferred.

Sweet speech, with a cheerful countenance is better than a gift made with a joyous mind.
டிஸ்கி: பின்னூட்டங்களில் வரிந்து கட்டி கொண்டு வசவு பாடுவதை விட்டு விடுவோம். வாழ்த்துவோம். வாருங்கள்.

Tuesday, July 14, 2009

அந்த சிவகாமி மகனின் செய்தி..


காமராஜர் பற்றி ஆர். வெங்கட்ராமன்.

மக்களிடம் நேரடித் தொடர்பு கொண்டு, அவர்கள் சொல்வதை நுட்பமாகக் கேட்டு, அவர்களுடைய கஷ்டங்களை அனுபவபூர்வமாக உணர்ந்து, உடனடியாகப் பரிகாரங்கள் தேடிக் கொடுத்தவர் காமராஜ்.

ஒருமுறை, அவருடன் நான் தஞ்சை ஜில்லாவுக்குச் சுற்றுப்பயணம் போயிருந்தேன். ஓர் இடத்தில் கூட்டத்தை முடித்துக் கொண்டு, நடந்து வந்து கொண்டு இருந்தோம். அங்கே, நடுப்பகல் நேரத்தில் பத்து வயதுச் சிறுவன் ஒருவன் கையில் குச்சி ஒன்றை வைத்துக் கொண்டு நிற்பதைப் பார்த்தார் காமராஜ். அவனிடம் அன்பாக, ”நீ பள்ளிக்கூடம் போகிறாயா?” என்று கேட்டார்.
”இல்லீங்களே!” என்றான் அவன்.

”என்னப்பா இது? நான்தான் பள்ளிக்கூடங்களில் இலவசமாகப் பாடம் கற்பிக்க ஏற்பாடு செய்திருக்கிறேனே, நீ ஏன் போகவில்லை?” என்று கேட்டார் அவர்.
”பள்ளிக்கூடத்திற்குப் போய்விட்டால் நான் சோத்துக்கு என்ன செய்வேன்? மாடு மேய்த்தாலாவது இரண்டு அணா ஊதியம் கிடைக்குமே!” என்று சொன்னான் அவன்.

காமராஜ் சிறிது நேரம் சிந்தனையில் ஆழ்ந்து விட்டார். பிறகு வரும் வழியில் என்னிடம், ”பார்த்தீர்களா! நாம் இலவசக் கல்வி அளித்தால் மட்டும் போதாது. சிறுவர்களுக்கு அங்கே மதிய உணவும் கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அப்போதுதான் அவர்கள் பள்ளிக்கூடத்திற்குப் போக முடியும்” என்றார்.
தமிழகப் பள்ளிக்கூடங்களில் இலவசமாக மதிய உணவு வழங்கும் திட்டம் இப்படித்தான் பிறந்தது.

சிலர் அவருக்கு ஆங்கிலம் அதிகம் தெரியாது என்ற தவறான எண்ணத்தில், அவர் சரியாக ஃபைல் பார்க்க மாட்டார் என்று கூட நினைப்பதுண்டு. இது தவறான ஓர் அபிப்பிராயம். அவரைப் போல ஆங்கிலப் பத்திரிகைகளை ஊன்றிப் படித்தவரோ, அல்லது காரியாலயத்து ஃபைல்களை நுட்பமாகக் கவனித்தவர்களோ மிகக் குறைவு.

புவனேஸ்வர் காங்கிரஸ் மாநாட்டில் அவர் தலைமை உரை நிகழ்த்த வேண்டியிருந்தது. அதற்கான முக்கியக் குறிப்புகளை என்னிடம் தந்து, உரையை எழுதச் செய்தார். நான் எழுதிக் கொடுத்த உரையைத் தனியாகத் தானே ஒரு முறை படித்து, பக்கத்தில் இருப்பவர்களிடம் ஓரிரு முறை படித்துக் காட்டச் சொல்லி, பிறகு நான் அவரைச் சந்தித்தபோது, ”ஆங்கிலத்தில் இந்தந்த இடங்களில் வார்த்தையை இப்படி மாற்றிப் போட்டால் இன்னும் பொருத்தமாக இருக்குமே!” என்று யோசனை கூறினார் காமராஜ். அந்த நுட்பமான மதிப்புரையைக் கண்டு நான் வியந்து போனேன்.

விவசாயத்திலும் சிறு பாசனத் திட்டங்களிலும் காமராஜ் மிகுந்த அக்கறை காட்டினார். அவருடைய ஆட்சிக் காலத்தில்தான் கீழ்பவானி, மணிமுத்தாறு, அமராவதி, சாத்தனூர், கிருஷ்ணகிரி போன்ற பல நீர்த்தேக்கத் திட்டங்கள் உருவாயின. இது போன்ற பெரிய திட்டங்கள்தான் என்றில்லை… கிராமங்களில் ஓடும் காட்டாறுகளைக் கூட சிறு அணைகள் கட்டி, நீரைத் தேக்கிப் பாசன வசதியைப் பெருக்குவதில் அவர் மிகுந்த சிரத்தை காட்டினார். திட்டங்கள் உருவாக அவர் யோசனை சொல்லும்போது அதிகாரிகள், ”இதற்கு விதிகள் அனுமதிக்கவில்லை” என்று தடுத்துக் கூறினால், அவருக்குக் கோபம் வந்து விடும்.

”இந்த விதிகளை வகுத்தது யார்? நீங்கள்தானே? அவற்றை உருப்படியான முறையில் நீங்களே மாற்றி அமையுங்கள். மக்களுக்கு நன்மை கிடைக்கவேண்டும். அதுதான் எனக்குத் தேவை!” என்று அடித்துச் சொல்லி விடுவார்.

அவர் காலத்தில்தான் மின்சார வசதி கிடைத்துள்ள மொத்த இந்தியக் கிராமங்களில் பாதி அளவு தமிழ்நாட்டிலேயே இருக்கிறது என்ற பெருமையை நாம் அடைய முடிந்தது. அதே போல விவசாயத்துக்காக பம்ப் செட் வசதிகள், அகில இந்தியாவில் உள்ள எண்ணிக்கையில் பாதி தமிழ்நாட்டில்தான் என்ற சாதனையையும் நாம் எட்டிப் பிடித்தோம். காமராஜ் நிர்வாகத்தை தமிழ்நாட்டின் பொற்காலம் என்பதில் மிகையில்லை.

ஒருநாள், ஒரு பெரிய விஷயத்தை நிதானமாக, மிக எளிதாக சுமார் அரைமணி நேரம் அவர் எனக்கு விளக்கிச் சொன்னார். அந்த விஷயம், பிறகு நாடெங்கும் பிரபலமான ‘காமராஜ் திட்டம்’தான்!

”இப்போது நாட்டில் உள்ள முக்கியத் தலைவர்கள் எல்லாரும் அநேகமாக நிர்வாகம் செய்யப் போய்விட்டார்கள். அதனால் ஸ்தாபனம் பலவீனமடைந்து விட்டது. ஆகவே, ஸ்தாபனத்தை வலுப்படுத்த, மூத்த தலைவர் தாமாகவே முன் வந்து பதவியைத் துறந்து, ஸ்தாபனத்துக்காகப் பணியாற்ற முனைய வேண்டும் என்பது என் திட்டம். இதை நேருஜியிடம் சமர்ப்பிக்கப் போகிறேன்” என்றார் காமராஜ்.

உடனே, ”உங்கள் திட்டத்தில் நீங்கள் ஒருவர்தான் பதவி துறப்பீர்கள்!” என்றேன் நான். அடக்கமாக ஒரு புன்னகை செய்தார் காமராஜ். பின்னர் நான் கூறியதே உண்மையாயிற்று. காமராஜ் திட்டத்தின்படி பதவியிலிருந்து விலகிய தலைவர்கள் அனைவரும், பிறகு மறுபடியும் பதவிக்கு வந்து சேர்ந்துகொண்டு விட்டார்கள்.

காமராஜ் எவ்வளவு உயர்ந்த தலைவரானாலும் சரி, அவரிடத்தில் பழகுவதில் அச்சம் இராது. அதேபோல, எவ்வளவு எளிய தொண்டராக இருந்தாலும் சரி, அவரிடம் பேசும்போது, காமராஜிடம் கர்வத்தைத் துளியும் பார்க்க முடியாது. இந்தக் குணாதிசயம்தான் காமராஜ் அவர்களை மக்கள் தலைவராக்கியது.
வாழ்க்கை வரலாற்றை அறிய இங்கே செல்லவும்.
டிஸ்கி:
1. இன்று { ஜீலை 15 } காமராஜர் பிறந்த நாள்
2. தகவல்கள் நன்றி விகடன் & நண்பர் RV