உலக சினிமா பார்க்க ஆரம்பித்த பிறகு கதைகள் படிக்கும் ஆர்வம் மிகவும் குறைந்து போனது. கதைகள் என்ன..?? வாசிக்கும் அனுபவமும் கூடத்தான்.
உடல் நிலை குறைவாக இருந்த அருமை நண்பர் உண்மைத்தமிழனை சந்திக்க போன போது இத படிச்சு பாருங்க.. நல்லாயிருக்கும் என்று சொல்லி பதிவர் சுப்பையா வாத்தியார் எழுதிய “செட்டி நாட்டு மண் வாசனைக் கதைகள்” புத்தகத்தை பரிந்துரைத்தார்.
முதலில் ஒரு கதையை படித்து பார்ப்போம் என்று ஆரம்மித்தவுடன் விறு விறுப்பு பற்றி கொண்டது. எளிய நடை, சிறந்த திறனாய்வு, சிரிக்கவும் சிந்திக்கவும் யதார்த்தமான எழுத்துகள் என அனைத்தும் அற்புதமாய் இருந்தது.
மொத்தம் 160 பக்கங்களில் 20 கதைகள். அனைத்தும் நகரத்தார் வாழ்கையின் பின்னணியில் எழுதப்பட்டது.
நகரத்தார் வீட்டு நிகழ்ச்சிகள், நடை முறைகள், பேச்சு வழக்குகள், அவர்களின் வாழ்வின் நிறை குறைகள் எல்லாம் நன்கு வெளிப்பட்டு ஒரு சிறந்த வாசிப்பு அனுபவத்தை கொடுத்தது. குறிப்பாக கவியரசர் கண்ணதாசனின் பொருத்தமான பாடல்களை ஆங்காங்கே இட்டு அழகு செய்திருக்கிறார் நூலாசிரியர்.
நகரத்தார் பின்னணியில் எழுதப்பட்டாலும் கதைகள் வெவ்வேறு ஊர்களில் நடைபெற்ற வண்ணம் ஒன்றுகொன்று மிகவும் வித்தியாசமாய் தனித்தன்மையுடன் விறு விறுக்க வைக்கிறது. ஹைதாராபாத்தில் நிகழும் ஒர் கதையில் பேகம் பஜார், சுல்தான் பஜார், கோட்டி, கொத்த பெண்டையா கடை, புல்லா ரெட்டி ரஸமலாய் என்று ஹைதாராபாத்தின் முக்கிய பகுதிகளையும் புகழ் பெற்ற கடைகளையும் சிலாகித்து எழுதியதை படித்தவுடன் என் மூன்று வருட அருமையான ஹைதை வாழ்க்கையில் சிறிது நேரம் மூழ்கி போனேன். ஒவ்வொரு கதையிலும் வேறு வேறு ஊர்கள், நிகழ்வுகள், வாழ்க்கை பற்றிய புரிதல்கள் என்று தனது பாணியில் கலக்கியிருக்கிறார். பல ஊர்களுக்கு அவர் சென்ற போது ஏற்பட்ட அனுபவங்களா.? அல்லது அங்கு வாழ்ந்த உறவு தொடர்புகளின் ஈடுபாடா..?? அப்படிதான் இருக்கும் என நினைக்கிறேன். அவ்வளவு யதார்த்தமாக சொல்லியிருக்கிறார். ஆசிரியரின் கூர்ந்த அவதானிப்பு அதை எழுத்தில் சொல்லிய விதமும் மிக அருமையாய் இருக்கிறது. அவர் நன்கறிந்த ஜோசியத்தையும் விட்டு வைக்கவில்லை. ஒரு கதையில் முழுமையாகவும் சிலவற்றில் சிறிது சிறிதாயும் சொல்லி வியக்க வைத்துள்ளார். ”தந்தி மீனி ஆச்சி” என்ற சிறு கதையில் ஆச்சியை “தில்லான மோகனாம்பாள்” படத்தில் வரும மனோரமாவாகவும் ஆயா வீடு சிறுகதையில் ஆயாவை பாதகாணிகை படத்தில் வரும் M.V ராஜம்மாவாகவும், தீபாவளி பற்றிய ஒரு சிறுகதையில் நாயகியை சினேகாவும் சித்தரிக்க ஆரம்பித்தவுடன் படிக்கும் போதே நமது கற்பனையுடன் அந்தந்த கதாபாத்திரங்கள் காட்சியாய் மனதிரையில் ஒடச்செய்து நல்ல உத்தியை கையாண்டவிதம் ஒரு செட்டி நாட்டு சினிமாவை பார்த்த உணர்வை தந்தது. மண் வாசனை மட்டுமல்ல நல்ல மனித வாசனைகளின் அற்புத தொகுப்பாய் இருக்கிறது.
ஆனந்த விகடன் பாணியில் கதைகளுக்கு ஏற்ப சில ஒவியங்களை இட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்பது எனது அபிப்பிராயம். அடுத்த தொகுப்பிற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.
சிறுகதை ஆர்வமுள்ளவர்கள் வாசிப்பு அனுபவம் உள்ள அனைவரும் விரும்பி படிக்கவேண்டிய அருமையான புத்தகம். நூல் விபரம்:ஆசிரியர்: SP.VR. சுப்பையா
பக்கங்கள் : 160
விலை : ரூபாய் 75
வெளியீடு: உமையாள் பதிப்பகம்
பழைய எண் 94 : புது எண் 14
சொர்ணாம்பிகா லே அவுட், ராம் நகர்
கோயம்புத்தூர் - 641 009.
அலைபேசி : 94430-56624
சென்னையில் புத்தகம் கிடைக்குமிடங்கள்
உமா பதிப்பகம்
18 / 171, பவளக்காரத் தெரு
மண்ணடி
சென்னை - 600001
தொலைபேசி எண்-25215363
குமரன் பதிப்பகம்
19, கண்ணதாசன் சாலை
தி.நகர் சென்னை-600017
தொலைபேசி எண் - 24353742